Wednesday, November 18, 2009

பிரிவு

கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்தில நான் அவள விட்டு பிரிஞ்சதேயில்ல. ஓவர்ஸீஸ் டெபுடேஷன்னதும் நெறயவே யோசிச்சேன். அவகிட்ட பேசினதில 'நாலு வாரம்தானே, ஓடியே போயிரும், போய்ட்டு வந்தா ப்ரமோஷன் வேற'ன்னு சந்தோஷமா வழியனுப்பி வெச்சா.

நாலு வாரம் நாலு மாசமானதில எல்லாமே போரடிக்க ஆரம்பிச்சது. காலிங் கார்டுல பேசறப்பல்லாம் 'உங்கள விட்டு என்னால் இருக்கவே முடியலப்பா'ன்னு பொலம்புவா. எனக்கும் அழுகை வரும். நானும் சொல்ல நெனப்பேன். ஆம்பளயாச்சே?! முடியுமா?!

குணா-ல வர்ற பாட்டு ஞாபகம் வரும் 'எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க அழுகை வந்தது. எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது'. ஒண்ணும் சொல்லாம சமாளிச்சு மனசுக்குள்ளயே அழுதுக்குவேன்.

ஒரு வழியா 'தாய் மண்ணே வணக்கம்' சொன்னப்போ ஆறு மாசாமாயிருச்சி. ஏர்போர்ட்டுல என்னப் பாத்தப்ப அவ கண்ல தண்ணி; என் கண்ணுல கூடத்தான்.

ராத்திரி எனக்கு புடிச்ச ஜாதிமல்லியோட பக்கத்துல படுத்தா. மெல்ல தொட்டப்ப 'நீங்க ரொம்ப மோசம்பா'ன்னா. 'என்னம்மாது...இன்னும் ஆரம்பிக்கலியே!' ன்னதும் 'ச்சீ..அதில்ல'ன்னு செல்லமா சிணுங்கினா.

'வேற என்னம்மா'ன்னதுக்கு, 'எப்ப பேசினாலும் நா 'நீங்க இல்லாம் என்னால இருக்க முடியலே'னு பொலம்பிகிட்டே இருப்பேன். ஆனா நீங்க? என்ன சமாதானப்படுத்தவாவது ஒரு தடவ, ஒரே ஒரு தடவ 'உன்ன விட்டுட்டு என்னாலயும் இருக்க முடியலேம்மா'ன்னு அழ வேண்டாம். அட்லீஸ்ட் வாய்விட்டு சொல்லிருக்கலாம். ஆனாலும் நீங்க ரொம்ப அழுத்தம்பா'ன்னா.

நான் என்னத்த சொல்றது?!

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

பெண்கள் எப்பவுமே அப்படிதான். எங்களோட எதிர்பார்ப்புகள் எளிமையானவையாகதான் இருக்கும். நல்லா பதிவு. நன்றி.