Thursday, March 14, 2013

வந்தவன்!*

*தலைப்புக்கு நன்றி : ‘வாத்தியார்’ சுஜாதா

தன் முன்னால் அமர்ந்திருந்தவனை, வங்கி அதிகாரி ஆண்ட்ரூ (எ) ஆண்ட்ரூ மில்லர் பார்த்தான்.

பழுப்பு நிறமாயிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். உப்பு/மிளகு தலை முடி ஒழுங்கில்லாமல் கலைந்து, நெற்றியில் புரண்டிருந்தது. இரண்டு நாள் தாடி.

ஆசியக் கண்டத்திலிருந்து வந்திருப்பான் போலும். பார்த்தாலே ஆண்ட்ரூவிற்கு வெறுப்பாயிருந்தது. இந்தியா / சீனா / பாகிஸ்தான் / வங்க தேசம் / இலங்கை-யிலிருந்து சலிக்காமல் பயணம் செய்து, ஸ்காட்லாந்திற்கு வந்து, வேலையும் நன்றாகச் செய்து, ஆங்கிலேயப் பிரஜையாகி நம் பிழைப்பில் மண்ணைப் போடுகிறார்கள். பிரசுரிக்கத்தகாத வார்த்தையை உதடுகள் மௌனமாய் உச்சரித்தது.

வங்கியில் கணக்கை இப்போதுதான் துவக்கியிருப்பான் போலும். பற்று அட்டையை (debit card) பணிவாய் நீட்டினான்.

'மாலை வணக்கங்கள். என் பெயர் நாகேஷ். இணைய வங்கி (internet banking) விண்ணப்பிக்க வந்திருக்கிறேன்’ என்றவனின் ஆங்கிலம் ஆங்கிலேயனின் ஆங்கிலத்தை ஒட்டியிருந்தது ஆண்ட்ரூவிற்கு எரிச்சலை அதிகப்படுத்தியது.

வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு பற்று அட்டையை வாங்கி, கணிணியை மேய்ந்தான்.

‘உங்கள் பிறந்த தேதி?’

சொன்னான்.

’உங்கள் தபால் இலக்கத்தின் (postal code) கடைசி மூன்று எண்களைச் சொல்ல முடியுமா?’

உதட்டைப் பிதுக்கி ‘தெரியாது’ என்று அலட்சியமாய்ச் சொன்னதில் எரிச்சல் கூடிற்று. ’எப்படியாவது இவனைச் சிக்கலில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்’ என்கிற எண்ணம் வந்தது.

‘உங்கள் அடையாளத்தை (identification) நிரூபிக்க வேறு ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டான். வங்கி அதிகாரி என்கிற அதிகாரத்தில், சந்தேகம் எழுந்தால் மட்டுமே கேட்க வேண்டும் என்கிற முறையை மீறிய கேள்வி அது. பற்று அட்டை வைத்திருப்பவன் என்பதே போதுமானதாயிருந்தது.

வந்தவன் யோசித்தான். ஆண்ட்ரூவிற்கு உள்ளுக்குள் சந்தோஷமாயிருந்தது. ஆனால், நீடிக்கவில்லை.

மேல் அங்கியை (coat) விலக்கி, துழாவி, பயண இசைவுச் சீட்டை (passport) எடுத்து நீட்டினான்.

வாங்கிப் பார்த்த ஆண்ட்ரூவிற்கு வந்தவன் இந்தியன் என்பது மட்டும் புரிந்தது. பெயர் வாயில் நுழையவேயில்லை. புகைப்படம் பொருந்திப் போனது.

வேறு வழியில்லாமல் அவன் சொன்னதைச் செய்து விட்டு, ‘இன்னும் ஐந்து தினங்களில் உங்களுக்குத் தபால் வந்து சேரும். பிறகு இணைய வங்கியை இனிதாய்த் துவங்கலாம்’ என்று செயற்கையாய்ப் புன்னகைத்து, குலுக்குவதற்காகக் கைகளை நீட்டினான்.

நாகேஷ் மெலிதாய்க் கை குலுக்கி, மார்பில் பெயரைப் படித்துவிட்டு ‘திரு ஆன்ட்ரூ! ஒன்று சொல்லட்டுமா?’

‘என்ன?’ என்பது போல் புருவம் நெரிந்தது.

‘உங்கள் நாட்டிற்குப் பணி நிமித்தமாய்த்தான் வந்திருக்கிறேன். அதுவும் ஆறு மாதம்தான். அதுவும் மனமில்லாமல்தான். நிரந்தரமாய்த் தங்கும் எண்ணமுமில்லை. இதற்கே உங்களுக்கு எரிச்சலாயிருக்கிறது என்றால் 300 ஆண்டுகள் எங்கள் நாட்டை விட்டுப் போகாமல் நங்கூரம் அடித்த உங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு எப்படியிருக்கும்?’ என்று நிதானமாய்க் கேட்டான்.

ஆண்ட்ரூ பதறி ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்றாலும் குரலில் சுரத்தில்லை.

‘பரவாயில்லை. எங்களுக்கு தோல் கெட்டி! அப்புறம் இன்னொன்று...’

‘இன்னுமா?’ என்பது போல ஆண்ட்ரூவின் பார்வை.

‘என்னைப் பார்த்தவுடன் நீங்கள் உதிர்த்த வார்த்தைக்கான அர்த்தத்தை உங்கள் தாயாரிடம் கேளுங்கள். இனிய மாலை உமதாகட்டும்’ என்று சொல்லிவிட்டு நாகேஷ் போயே விட்டான்!

Thursday, February 21, 2013

55 வார்த்தை கதை வரிசை - நடிகையுடன் ஒரு ஆட்டம்!

இவ்வளவு அருகாமையில் நடிகையுடன் இருப்பேன் எனச் சத்தியமாக நினைக்கவில்லை. (7)

எது அணிந்து வந்தாலும் பாந்தம் / அழகு சொட்டும் நடிகை. எல்லாப் படங்களையும் விடாமல் முதல் நாள் பார்த்துவிடுவேன். நகையெல்லாம் அணிந்த விளம்பரத்தைக் கூட நான்தான் முதலில் பார்த்ததாக நண்பர்கள் சொன்னார்கள். (22)

அவளைப் பற்றிய கிசுகிசுக்கள் என்னை ரொம்பவே பாதிக்கும். தவறாகப் பேசிய நண்பனை அறைந்திருக்கிறேன். அப்படிப்பட்ட அவளுடன் நெருக்கமாக இப்போது. (14)

கிறங்கிய கண்களால் கண்ணடித்தபோது தன்னை மறந்து, தியேட்டரின் முதல் வரிசையிலிருந்து காகிதக் கத்தைகளைத் திரையில் எறிந்தேன். (12)

Wednesday, February 20, 2013

55 வார்த்தை கதை வரிசை - மீசை!


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் கூட்டமில்லை. நானும் அவனும் நிதானமாய்த் தரிசித்தோம். (8)

அவன் அர்ச்சகரைக் கேட்டான். ‘சாமி! பெருமாளுக்கு மீசை சரியா வெக்கலியா?’(8)

‘சரியாத்தானே இருக்கு!’(2)

‘ரைட் ஸைட், லெஃப்டை விட சின்னதாயிருக்கு, பாருங்களேன்’ (6)

’ஆமாம்..அப்பப்ப கரப்பான் தின்னுடறது’ (4)

‘சாமி! பெருமாளுக்கு மீசைதான் அழகு. கொஞ்சம் கவனமாயிருங்க!’ (6)

‘தம்பி சொல்றது உண்மைதான். இப்ப சரி பண்ணிர்றேன்’(6)

வெளியில் வந்தோம். ‘அப்புறம் சொல்றேன்னியே! என்னாச்சு அழகு முறுக்கு மீசை?’ (8)

அவன் ‘ட்ரிம் பண்ணும்போது பிசகிருச்சி... வழிச்சிட்டேன்!’ சொல்லிவிட்டுப் புன்னகைத்தான். (7)

55 வார்த்தை கதை வரிசை - குருவாயூரப்பா!

‘லாஸ்ட் வீக் புது பென்ஸில் பாக்ஸைத் தொலைச்சிட்டேன்.. ‘குருவாயூரப்பா!’னு சொன்னே. நேத்திகூட சைக்கிளை அஸ்வின் மேலே விட்டதா அவங்க வீட்ல ரிப்போர்ட்...அப்ப கூட ‘குருவாயூரப்பா!’னுதான் கோவத்தோட சொன்னே...ஏம்பா?’ (22)

‘செல்லம்! அப்பா அம்மாக்கு நீ ரொம்ப லேட்டா பொறந்தயா? அதனால எது பண்ணாலும் திட்டமுடியல. ஆனாலும் கோவம் வருதே. அதனால ‘குருவாயூரப்பா!’ சத்தம் போடுறேன்’ (18)

‘இனிமே சமத்தா இருக்க ட்ரை பண்றேன்பா’ (5)

ரெண்டு நாள் கழித்து... (3)

‘குருவாயூரப்பானு ரெண்டு தடவை சொல்லு...!’ (4)

‘???’

’கனடா காமிராவை உடைச்சிட்டேன்பா!’ (3)

Tuesday, February 19, 2013

55 வார்த்தை கதை வரிசை - இதயம்

பிப்ரவரி எட்டு
29 வயசு டேவிட் அகாலமாய் மாரடைப்பில் இறந்து போனான். (9)

பிப்ரவரி ஒன்பது
ஆஃபீஸ் கிளைகள் தாண்டி துக்கம் அனுஷ்டித்தது. (7)

பிப்ரவரி பத்து
ஒரே மகனை இழந்த பெற்றோரைத் தேற்ற ஆளில்லை. நெருங்கிய நாலு பேர் கல்லறை வரை போனார்கள்.  டேவிட் என்பவனின் வாழ்க்கை ஆறடியில் தோற்றம்-மறைவு என்று அடங்கிப்போனது. (22)

பிப்ரவரி பதினான்கு
சக ஊழியை எலிஸாவின் கண்ணீர் காதலர் தின வாழ்த்து அட்டையில் பட்டுத் தெறித்தது. ’ஒரு வாரம் முன்னால் கொடுத்திருந்தால் பிழைத்திருப்பானோ? ’ (17)

Monday, February 18, 2013

55 வார்த்தை கதை வரிசை - போட்டி!

’டேய் வேணாம்மா’ (2)

‘இல்ல மச்சி, ட்ரை பண்ணா மாட்டிரும்!’ (5)

‘நமக்கும் இதுக்கும் ஒத்து வராது. அந்த கம்னாட்டி நம்மால முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டே சேலன்ஞ் பண்ணிருக்கான்’ (11)

‘சப்பை மேட்டரு. ஒரு தபா, ஒரே தபா அண்ணன் ட்ரை பண்ணார்னா வந்து விழாதா என்ன? அந்த தீபா மேட்டர்ல நாமதான ஃபர்ஸ்ட்டு, என்ன ஃபெர்பாமென்ஸு, கவுந்திருச்சி தீபா!’ (21)

‘ ’நிலா’ சினிமா பாட்டு கலெக்‌ஷ்ன்ஸ்பா… கலாய்ச்சிட்ட…இது?’ (6)

‘இப்ப என்னாங்கற…55 வார்த்தைல கதை எழுத முடியாதுங்கிறயா…அப்ப கத வுடு!’ (10)

55 வார்த்தை கதை வரிசை - காதல்

சமீபமாகத்தான் அவளை பெல்ஸ் ரோடு நிறுத்தத்தில் பார்க்கிறேன். நான் போகும் பஸ்-ஸில்தான் அவளும்! Tvs-ல் நான் இறங்குவதால், ’எதுவரை போகிறாள்?!’ (15)


மூன்று நாட்களாக மிக அருகாமையில் நின்றதில், கண்கள் எதேச்சையாக(?!) மோதிக்கொண்டதால், அலுவலகம் இல்லாத சனிக்கிழமையானாலும் டீக்காக உடையணிந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.’எப்படியாவது இன்னிக்கு கேட்டுடணும்' (18)


'கோரா' ஸில்க்/attached short sleeves-ல் அவள். நெருங்கியதில், lavender மணம்! (கண்கள் மோதிக்கொண்டன!) (11)


மெலிதாய்த் தொண்டையைச் செருமி, "எக்ஸ்க்யூஸ் மீ"(5)


'என்ன?' புன்னகைத்ததில் totally flat! (4)


"25 போயிடுத்தா?" (2)

Saturday, January 19, 2013

Mrs. காதலி



நான் மாலினியைச் சந்தித்த முதல் நொடியிலேயே காதலிக்கத் துவங்கிவிட்டேன்.  திருமணமானவள் எனத் தெரிந்துங்கூட.

நான் என்கிற ராஜாராமன் ஒரு பட்டதாரி.  படித்து முடித்தவுடன் சுடச்சுட software கம்பெனி ஒன்றால் traineeயாய்த் தத்தெடுக்கப்பட்டவன்.  தேசீயமயமாக்கப்பட்ட வங்கியொன்றின் திருச்சி கிளையில் மேலாளராய்த் தந்தை.  அதனால் பிரம்மச்சாரியாய், தனியனாய் மும்பை வாசம்.  நிறைய அரட்டை, நிறைய சிகரெட் (அப்பாவிற்குத் தெரியாது), நடுவில் கொஞ்சமாய் SQL / PLSQL code எழுதும் சிக்கலான வேலை.

Project-ன் முக்கிய தருணத்தில் இன்னொரு ‘கை’ தேவைப்பட்டதில், என்னுடன் கோர்க்கப்பட்ட பெண் மாலினி.  மாலினி ஐஸ் இல்லை; ஏன் நம்மூர் த்ரிஷா போலக்கூட இல்லை.  இருந்தும் பிடித்துப்போய், ஒன்றுமே தோன்றாது அதிர்ந்து விட்டேன்.  மாலினி என்னமோ சகஜமாய்த்தான் பழகினாள்; நான்தான் மாறிப்போய் விட்டேன்.

இரண்டே நாட்களில் மாலினி கண்டுபிடித்துவிட்டாள்.  கேட்டபோது மறைக்காமல் ஒப்புக்கொண்டேன்.  அவள் சிரித்தாள்.  ‘நீ வெளிப்படையாய்ப் பேசினது எனக்கு புடிச்சிருக்கு.  ஆனா, இதெல்லாம் சரிப்படாது’.  நான் ஒப்புக்கொள்ளவில்லை.

இவ்வளவு ஆனபின்னும் மாலினி இயல்பாய்த்தான் நடந்து கொண்டாள்.  என்னோடுதான் லஞ்ச்.  எப்போதும் போல ‘சள சள’வென வீழும் அருவி போலப் பேச்சு.  நான் ‘கவிதை’ கூட எழுத ஆரம்பித்து விட்டேன்.

திருமணமானவள் எனத் தெரிந்தும்
திரும்பிப் பார்க்கிறேன்;
விவாகமானவள் எனத் தெரிந்தும்
விரும்பிப் பார்க்கிறேன்;
கல்யாணமானவள் எனத் தெரிந்தும்
காதலித்துப் பார்க்கிறேன்!

மாலினிக்குக் கூடக் காட்டினேன்.  படித்தவுடன், ‘கொஞ்சம் லூஸோ’ என எண்ணுமளவிற்கு விழுந்து விழுந்து சிரித்தாள்.

அன்று வழக்கம்போல் லஞ்சுக்கு ‘ஷிவ் ஸாகர்’ வந்தோம்.  கூட்டம் நெரிந்தது.  இடம் பிடித்து உண்ணத் துவங்கினோம்.  பேரரிடம் ‘இன்னுமொரு ரொட்டி’ என்றேன்.  எடுத்து வந்தவன் தவறுதலாய் மாலினி தட்டில் வைத்துவிட்டான்.  பாதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த, விரலைச் சப்பி ருசித்துக் கொண்டிருந்த கையால் எடுத்து ‘ஏ இந்தா’ என மாலினி கொடுக்க, நான் வாங்க மறுத்தேன்.  வியப்புடன் மாலினி பார்க்க ‘ஸாரி! நான் வேறே ரொட்டி ஆர்டர் பண்ணிக்கறேன்.  எனக்கு எச்சில் பிடிக்காது’ என்றேன்.

‘நான் மட்டும் என்னவாம்?’ என்று casual-ஆகத்தான் மாலினி கேட்டாள்.  எனக்குத்தான் பிய்ந்து போன செருப்பால் அடி வாங்கியது போல இருந்தது!

இன்றும் மாலினியோடுதான் பணி புரிகிறேன்.  நல்ல நண்பனாக.