Sunday, October 04, 2009

இரக்கம்

முன் குறிப்பு - 22 வருடங்களுக்கு முன் கையெழுத்து பிரதியான "பைரவி"யில் வெளிவந்த என் கதை அப்படியே தரப்பட்டிருக்கிறது. இந்த எழுத்தில் காணப்படும் "கன்னி"த் தன்மை என்னைக் கவர்கிறது. "காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு"தானே!

12ம் நம்பர் பஸ் ஐஸ் ஹவுஸ் டெர்மினஸ் வரும்போதே நல்ல கூட்டம். எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு ஏறினர், என்னைத் தவிர! எல்லோரும் ஏறிய பிறகு, நான் ஏறி இரண்டாம் படிக்கட்டில் நின்றேன். அப்போதுதான் அவ்வாலிபனை, நடத்துனர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்தேன்.

ஒல்லியான தேகம். சுருள் முடி. வெளிர் நீல சட்டை. நீல பாண்ட். சட்டை பாக்கெட்டில் அழகாக செருகி வைக்கப்பட்ட பேனா. அருமையாக இருந்தான்.

அடுத்து வந்த ஐஸ் ஹவுஸ் போலிஸ் ஸ்டேஷனில் மற்றொரு கும்பல் ஏறிற்று. நான் இப்போது மூன்றாம் படிக்கட்டில் நின்றேன். பஸ் சிறிதே முனகிவிட்டு செல்ல ஆரம்பித்தது!

இரண்டொரு ஸ்டாப்பிங்குகள் கடந்தன. திரும்பிப் பார்க்கையில் அவ்வாலிபனுக்கு எதிரில் ஒரு கனமான அம்மாளும், கைக்குழந்தைக்காரியும் நின்றிருந்தார்கள். அவ்வாலிபனோ, ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்தான். அதைக் கலைத்தது அந்த கனமான அம்மாளின் குரல்!
"பச்ச புள்ளயோட அந்தம்மா நிக்கறது தெரியல? எழுந்து எடம் விடப்பா!" என்றாள் (கத்தினாள் என்பதே பொருந்தும்!) அவ்வாலிபன் அதிர்ந்து போய் எழுந்தே விட்டான்.

இதையெல்லாம் கவனித்து வந்த நான், "ஸார்! நீங்க உக்காருங்க. இந்த ஸ“ட்டுக்கு முன்னாலயும் லேடீஸ் ஸ“ட்தான். பின்னாலேயும் லேடீஸ் ஸ“ட்தான். அவங்க யாருக்குமே இல்லாத இரக்கம் உங்க கிட்ட மட்டும் இருக்கணுமா? நீங்க உக்காருங்க ஸார்! அப்படியே அந்தம்மா உக்காந்துதான் ஆகணும்னா லேடீஸ் ஸ“ட் லேந்து யாராவது எந்திரிச்சப்புறம் உக்காரட்டும்" என்றேன் அந்த கனமான அம்மாளின் பார்வையைப் பொருட்படுத்தாமல்!

உடனே அவ்வாலிபன் " பரவாயில்லப்பா, பொண்ணுன்னா பேயும் இரங்கும்னு பெரியவங்க சொல்வாங்க. நான் பேயை விடக் கொடியவனா இருக்க விரும்பல. புக் படிச்சிக்கிட்டு இருந்ததால நான் இவங்கள கவனிக்கல. அவங்க இப்ப உக்காரட்டும்" என்றான். நான் பதில் பேசவில்லை. அவன் எழுந்து கொஞ்சம் சிரமப்பட்டு தள்ளி நின்றுகொண்டான்.

Amruthanjan stopping வந்தது. அவ்வாலிபன் இப்போது மிகவும் சிரமப்பட்டு இறங்கினான்.

பஸ்ஸ”ம் கிளம்பியது. அவன் விந்தி விந்தி நடந்ததைக் கண்டு நான் அதிர்ந்தே போனேன்!

அந்த கனமான அம்மாள் முகத்தில் ஈயாடவில்லை!

1 comment:

இன்றைய கவிதை said...

இந்த கதையை என்னால் மறக்க இயலாது...பைரவியும் காந்தர்வமும் நிறைய கற்று தந்தது ...
நன்றி நண்பா

ஜேகே