Saturday, October 06, 2012

நெரிசல்


சோமனஹள்ளி செல்லும் 211 பேருந்து பனஷங்கரி வந்தபோது, நிறுத்தத்தில் நெரிசல்.  நின்றிருந்த அவனுக்கு ஆயாசமாயிருந்தது.

எல்லோரையும் உள்ளே தள்ளி, படிக்கட்டில் அவன் தொற்றிக்கொண்டான்.  இரண்டாவது நிறுத்தம் ஜரகனஹள்ளி என்றாலும், ஊர்ந்து கொண்டிருந்த போக்குவரத்தில் எப்படியும் போய்ச்சேர இருபது நிமிடங்களாகிவிடும் என்கிற எண்ணத்தில் எரிச்சலும் சேர்ந்தது.  

நோட்டம் விட்டதில் பேருந்தின் முன் பகுதி (மகளிருக்கான பகுதி) மட்டுமே தெரிந்தது.  முன்னிருபது அவளும், தேய்த்துக்கொண்டு அருகில் நிற்கும் நடுத்திரத்தைத் தாண்டிய வயதான அவரும் தெரிந்தார்கள்.  ‘வயதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள், பாரேன்!’ என்று ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்ததற்குக் காரணம் அவளின் அழகும், அவனின் இளமையும், ஏலாமையும் இருக்கக்கூடும்.

ஸாரக்கி வந்ததில், நெரிசல் குறைந்து, அவனுக்கு பேருந்தினுள் நுழைய இடம் கிட்டியது.  அந்த வயதானவர் அருகில் வந்து ‘ஐயா! கொஞ்சம் தள்ளி நிற்கலாமே?!’ உரக்கக்கூறியது பெண்ணின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.  உத்தேசம் அதுவாயும் இருந்திருக்கலாம்.

அவர் பதிலேதும் சொல்லாமல் மௌனம் காக்க, அவள் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்து, ‘அவர் எங்கப்பா!’ என்றதும், அவன் அதிர்ந்து, வாயடைத்தான்.

வயதானவர் கொஞ்சம் இல்லை, அதிகமாகவே விலகியதில் அவன் மனம் இன்னும் காயமானது.  மன்னிப்புக் கோரி ஸாரக்கி சிக்னலிலேயே இறங்கி மறைந்து போனான்.

தள்ளி நின்ற அவரை அவள் நிமிர்ந்து, கனிவாய்ப் பார்த்தாள்.  அவரது விழிகளில் இதுவரை இருந்த கயமை தொலைந்து, கண்ணீரும், மன்னிப்பும் கூடவே நன்றியும் தெரிந்தன.

No comments: