Friday, October 16, 2009

அப்பாவும் தீபாவளியும்

குமுதம் ஜங்ஷனில் 2003 தீபாவளி இதழில் வெளிவந்தது.படித்துப் பாருங்களேன்!
தீபாவளியை என் அப்பா கொண்டாடும் அழகே தனி. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

என் அப்பாவின் தாத்தா திதி தீபாவளி அன்று வருவதால் அவர் சிறு வயதில் பண்டிகை கொண்டாடியதேயில்லை. ஊரெங்கும் மகிழ்ச்சியுடன் புத்தாடை உடுத்திருக்கையில் என் அப்பா மட்டும் பழைய உடை அணிந்திருப்பார். என் தாத்தா கொடுக்கும் காலணா வெங்காய வெடிகளில் அப்பாவின் தீபாவளி முடிந்துவிடும்! மதியம் திதி முடிந்தவுடன் கொண்டாடப்படும் தீபாவளியில் என்ன சுகம் இருந்திருக்க முடியும்?

எங்களுக்கு விவரம் தெரிந்த வயதில் தீபாவளியைக் கொண்டாடக் கற்றுக் கொடுத்தார். தனக்கு ஒரு எட்டு முழ வேட்டி, ஒரு புது 'கை வைத்த' உள் பனியன், ஒரு துண்டு என்பதோடு திருப்தி யடைந்த அவர், எங்களுக்கு துணிகள் வாங்கிக் கொடுப்பதில் குறையே வைக்கவில்லை. சமயத்தில் இரண்டு/மூன்று செட்கள் கிடைத்து விடும்.

சேனல்களில் அப்போதெல்லாம் வீடுகள் அடைபடாத காலம். தீபாவளியின் சந்தோஷமே பட்டாசுகள்தாம். அதை நன்றாக உணர்ந்திருந்தார் என் அப்பா. மத்திய சர்க்காரில் (ஏஜ“ஸ் அலுவலகம், தேனாம்பேட்டை) வேலை செய்பவர்களின் பல சலுகைகளில் ஒன்று சகாய விலையில் பட்டாசுகள்! அதற்கென்றே ஒரு தனிக்கூட்டம் என் அப்பா அலுவலகத்தில் கூடும்.

என் அப்பாவின் ரசனைகள் தனி. 5 'குருவி' வெடிகள் கொண்ட பாக்கெட் 25; 5 'லஷ்மி' வெடிகள் கொண்ட பாக்கெட் 5; 3 'redfort' சரங்கள்; 1 பாக்கெட் ஊசிப்பட்டாசு; 3 டஜன் கம்பி மத்தாப்புகள் (சாதாரணமான கம்பி மத்தாப்புகளில்தான் ஆர்வம்!); 1 டஜன் சாட்டை; 2 டஜன் தரைச்சக்கரம்; 3 டஜன் புஸ்வானம் என்று வகை வகையாக வாங்கினாலும் விலையென்னவோ ரூ 100க்குள்தான் இருக்கும்! racket, atom bomb, double வெடிகளில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. பொறுமையாக எங்கள் மூவருக்கும் பிரித்துக் கொடுப்பார் (நான், எனது தங்கை, தம்பி!). அப்பா வாங்கித்தந்த எந்த வெடிகளும் சோடை போனதில்லை.

தீபாவளிக்கு முதல் நாளில் வீட்டில் நிச்சயம் 'பஜ்ஜி' உண்டு! உருளை, கத்திரி, புடலை, வாழை என வகைகள் நீளும். அன்றைய இரவே மறுநாள் உடுத்த வேண்டிய துணிகளை எடுத்து பூஜையறை பலகை முன் வைத்து விடுவார். தலைக்குத் தேய்க்க வேண்டிய எண்ணெய் கூட காய்ச்சி வைக்கப்பட்டு விடும்! கேஸ் பர்னரில் தலையில் 'தவலை'கள் தண்ணீருடன் ஏற்றப்பட்டு விடும்!

காலை 3.30 மணிக்கு எழுப்பி விடுவார் (அது போகப்போகத் வளர்ந்து 4.30 ஆகி இன்று 5.30 ஆகிவிட்டது!). தலைக்கு எண்ணெய் வைக்கப்பட்டவுடன் எங்களில் ஒருவரோடு வீட்டிற்கு வெளியே வந்து ஒரு 'redfort' சரம் வைப்பார். 'பட பட' வென அது வெடிக்கும்போது அவர் முகம் விரிவதை நான் பார்த்திருக்கிறேன். 'எண்ணெய் வெச்சுண்டவுடனே ஒரு பட்டாசு வெக்கணும்; அதான் சாஸ்திரம்' என்பார்.

எல்லோரும் குளித்து முடித்தவுடன், தான் பலகையில் உட்கார்ந்து உடல் முழுதும் எண்ணெய் தேய்த்துக்கொள்வார். 'எண்ணெய் உடம்பு முழுக்க ஒரு எடம் விடாம தேச்சுக்கணும்; அப்பதான் ஒரு வியாதி வராது; அதே போல சீயக்கா மட்டும்தான் தேய்ச்சுக்கணும்; இன்னிக்கு சோப்பு கூடாது; எண்ணெய் முழுக்க போற மாதிரி சீயக்கா தேச்சுக்கபடாது; கொஞ்சம் பிசுபிசுப்பு இருக்கணும்' என்பார். குளித்தவுடன் எல்லோரையும் அன்பாக "கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்று விசாரிக்கும் அழகே தனி. அதே போல 'தீபாவளி மருந்து' சாப்பிட்ட பின் தான் எல்லா இனிப்பு/கார வகைகளில் கை வைக்க வேண்டும் என்ற அன்புக் க்ட்டளை வேறு!

"புஸ்வாணம், தரைச்சக்கரம், சாட்டை இதல்லாம் ராத்திரி விடணும்; அப்பத்தான் நன்னா இருக்கும். அதுவும் புஸ்வானம் பூத்து விரியற அழக ராத்திரிலதான் பாக்கணும்" என்று வற்புறுத்தி எங்களை ரசிக்க வைத்ததில் அவருடைய பங்கு அதிகம்.

தீபாவளி அன்று அவர் பாதம் தொட்டு ஆžர்வாதம் வாங்க வரும அனைவருக்கும் 'ஒரு ரூபாய்' நாணயம் உண்டு. அது வாங்குவதற்கென்றே எனது நண்பர்/உறவினர் கூட்டம் வருவதும் உண்டு!

இன்றும் தீபாவளி இருக்கிறது; அப்பாதான் இல்லை
!

5 comments:

Priyamvada_K said...

தீபாவளி உண்டு - அப்பாதான் இல்லை- இந்த ஒரு வரியில் மனதை தொட்டுவிட்டீர்கள்.

இப்படி நம் வாழ்க்கையில பல பிரகாசங்களை கொடுத்தவர்களை மறக்கவே முடியாது.

Priya.

இன்றைய கவிதை said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் பெரிய தெரு நினைப்பு வருது. நன்றி நன்பா (almost கண்ணீருடன்)

ஜேகே

பா.ராஜாராம் said...

ரொம்ப நெகிழ்வான பதிவுங்க.எப்படி இவ்வளவு நாளா உங்களை மிஸ் பண்ணேன்.anyhow,thanks!

அன்புடன் மலிக்கா said...

உருக்கமாய் உருகியது மனம்..

நல்ல இடுகை..

Vijay said...

உங்க பதிவைப் படிச்சுட்டு எனக்கும் எங்கப்பா ஞாபகம் வந்துவிட்டது :(